Site icon Holy Temples

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர்

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு முமூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஐப்பசி மாதத்தில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து நடராஜராகவும், மதியம் வெள்ளை வஸ்திரம் அணிந்து பிரம்மாவாகவும், மாலையில் பச்சை வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பாகும். ஒரு சமயம் கவுதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்ட இந்திரனின் உடல் முழுவதும் கண்ணாகும் படி கவுதம முனிவர் சபித்து விட்டார். சாப விமோசனம் பெற இந்திரன் இத்தலத்திற்கு அருகில் உள்ள சுசீந்திரம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் அவனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார். அப்போது இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் பாவம் ஒட்டிக்கொண்டதாகக் கருதிய அவனது வாகனமான குதிரையும் சிவனிடம் விமோசனம் கேட்டது. சிவனோ குதிரையை இத்தலத்திற்கு வந்து முருகனை வேண்டி சாப விமோசனம் அடையுமாறு பணித்தார். அதன்படி இங்கு வந்த குதிரையும் இங்கிருந்த குன்றின் மீது முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் அதற்கு காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். குதிரை வழிபட்ட தலம் என்பதால், இத்தல முருகன் விழாக்காலங்களில் மயிலுக்குப் பதிலாக குதிரையில் பவனிவருகிறார். இந்த முருகன் சிலையானது மயிலோடு சேர்த்து ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பாகும். 

பலன்கள்:

இத்தலத்து முருகனை வழிபட்டால் அணைத்து பாவம் மற்றும் சாபங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

நாகர்கோயில் கன்னியாகுமரி சாலையிலுள்ள சுசீந்திரத்திலிருந்து 7 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. நாகர்கோயிலிலிருந்து 15 KM தொலைவு. நாகர்கோயிலிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

நாகர்கோயிலில் தங்கி அங்கிருந்து செல்லலாம். நாகர்கோயிலில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரை

மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர், நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

தொலைபேசி: 

04652- 241 421.

இந்த பதிவை பகிர:
Exit mobile version