இறைவன்: | கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர் |
இறைவி: | ஒப்பிலாமுலையம்மை |
தீர்த்தம்: | கோமுக்தி தீர்த்தம் |
பாடியோர்: | சுந்தரர், சம்பந்தர், அப்பர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 36 வது ஆலயம். திருக்கயிலாயத்தில் இறைவி இறைவனோடு சொக்கட்டான் ஆடிக்களித்தமையால் பசு வடிவம் எய்தினார்.. அவர் அப்பசு வடிவத்தோடு இங்கு வந்து வழிபட்டு அவ்வடிவம் நீங்கப்பெற்றனர். இறைவரின் திருப்பெயர் மாசிலாமணியீஸ்வரர். இவரே கர்ப்ப கிரகத்தில் எழுந்தருளியிருப்பவர். அணைத்தெழுந்த நாயகர்; இவர் உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர். திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவர் இவரே. இரண்டு பிள்ளையார்கள் துணை வந்த பிள்ளையார், அழகிய பிள்ளையார். இறைவியின் திருப்பெயர் ஒப்பிலாமுலையம்மை. இத்திருப்பெயர் சுந்தர மூர்த்திநாயனாரால் `ஒப்பிலா முலையாள் ஒரு பாகா“ என்று இவ்வூர்ப் பதிகத்தில் எடுத்து ஆளப்பெற்றுள்ளது. தீர்த்தங்கள் கோமுத்தி தீர்த்தம், பத்மதீர்த்தம், கைவல்யதீர்த்தம் என்பன. இவை முறையே திருக்கோயிலுக்கு எதிரிலும், கொங்கணேசுவரர் கோயிலின் பக்கத்திலும், திருக்காவிரியிலும் இருக்கின்றன.
திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரம் இயற்றிய திருத்தலமிது. ஒரு ஆண்டுக்கு ஒரு பதிகம் வீதம் மூவாயிரம் பதிகம் பாடிய இவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. சிவபக்தரான திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோயில் மதில் மீது இருந்த நந்திகளனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோயில் மதில் மீது நந்திகள் கிடையாது. சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது. திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம். முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம்.
தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார். இவரது உயரம் 14 அடி 9 அங்குலம். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயில் ஒரே கல் நந்தியின் உயரம் 12 அடி).தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம். இக்கோயில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது.
தேவாரம்:
கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 15.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 9.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாடுதுறை, குத்தாலம் வழி, மயிலாடுதுறை மாவட்டம் 609803.
தொலைபேசி:
04364 – 232055