கோயிலின் சிறப்புகள்:
இக்கோயிலில் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் பின்னர் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் காண வேண்டுமானால் விளாச்சேரியில் உள்ள பட்டாபிஷேக ராமர் கோயிலில் காணலாம். இங்குள்ள கோயிலில் வலதுபக்கத்தில் சீதா, இடப்பக்கம் லட்சுமணன் சகிதமாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் ராமர். கருடனும், அனுமனும், துவாரபாலகர்களாக வீற்றிருக்கின்றனர். இதே கோலத்தில் தான் ராமரின் பட்டாபிஷேக காலத்தில், ராமருக்கு வலப்பக்கம் சீதையும், இடப்பக்கம் லட்சுமணனும் வீற்றிருந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் விளா பூஜை நடக்கும், இந்த விளா பூஜைக்கு விளாமரங்கள் அடர்ந்த இந்த ஊரில் இருந்து தான் கோயில் நெல் கொண்டு செல்வார்கள் இதனாலேயே இந்த ஊர் விளாச்சேரி ஆனது. காசிமாநகரில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கே செல்வதால் மிக புண்ணிய நதியாகிறது. இதேபோல் விளாச்சேரியிலும் வைகை நதி வடக்கிலிருந்து தெற்கே செல்வதால் மிகவும் புனிதமாகிறது. இங்கு குளித்து பட்டாபிஷேக ராமரை தரிசித்தாலோ, பலன் ஒன்றுக்கு பல மடங்கு கிடைக்கிறது. தமிழ்ப்புலமை பெற்ற பரிதிமார் கலைஞர் பிறந்த ஊர் இதுவேயாகும். முக்கோண வடிவமுடைய இந்த ஊரில் கிட்டத்தட்ட 60 கணபாடிகள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதே இவ்வூரின் சிறப்பை குறிப்பதாகும்.
பலன்கள்:
அமர்ந்த நிலையில் அருளாட்சி செய்யும் ராமச்சந்திரனை தரிசித்தால் பதவியும் புகழும் தேடி வரும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மதுரையிலிருந்து 9KM தொலைவில் இக்கோயில் உள்ளது. மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விளாச்சேரிக்கு நகரப் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மதுரையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில், விளாச்சேரி, மதுரை – 625 006.
தொலைபேசி:
97888 54854