இறைவன்: | திருப்பயற்றுநாதர் |
இறைவி: | காவியங்கண்ணி அம்மன் |
தீர்த்தம்: | சிலந்தி தீர்த்தம் |
பாடியோர்: | அப்பர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 78 வது ஆலயம். முன்னொரு காலத்தில் சிவபெருமானிடத்தே பேரன்புகொண்ட வணிகர் ஒருவர் மிளகு வாணிகம் செய்து வந்தார். அவர் ஒருமுறை கடற்றுறை நோக்கி இத்தலத்தின்வழியே செல்லும்போது சுங்கச்சாவடி அண்மையில் இருக்கக்கண்டு தலத்தின் பெருமானையடைந்து, பயற்றுக்கு வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார். அவர் வேண்டுகோளின்படி மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாயின. வணிகரும் மகிழ்ந்து வரியில்லாமல் சென்றார். பின் பயறு மிளகாகியது. வணிகர் மிக்க இலாபம் பெற்றார். மேற்கண்ட செவிவழிக் கதையால் இத்தலத்தின் பெயரும் சிறப்பும் விளங்குகின்றது. பஞ்சநதவாணன் என்பவனின் கண் நோய் நீங்குதற்காக நிலம் கொடுத்த செய்தி இத்தலத்தின் முதல் கல்வெட்டினால் அறியப்படுவதால் யாரேனும் கண் நோய் அடைந்திருப்பின் இத்தலத்தினை அடைந்து கருணாதீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும் திருப்பயற்றுநாதனையும் வழிபடின் கண்நோய் நீங்கப் பெறுவர் என்ற உண்மையும் புலனாகின்றது. பைரவ மகரிஷி வழிபட்ட திருத்தலம். இங்கு வீரமாகாளிஅம்மனுக்கு தனி சன்னதிஉள்ளது.
தேவாரம்:
உரித்திட்டா ரானை யின்றோ லுதிரவா றொழுகியோட
விரித்திட்டா ருமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்கனோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டா ரெயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திருவாரூரிலிருந்து சூரக்குடி வழியாக நாகூர் செல்லும் சாலையில் 15.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. திருவாரூரிலிருந்து பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8.00 – 11.00 மற்றும் மாலை 6.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருபயத்தங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் 609701.
தொலைபேசி:
ஜி .ராமநாதன்: பரம்பரை அறங்காவலர் – 04366 – 272423, 9865844677
ஆர் .அகஸ்தீஸ்வர குருக்கள்: 04366 – 272010, 9626928610