கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் ஆஞ்சநேயர் வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வரும் ஆஞ்சநேயர் இந்த இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டார். எனவே மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி மலை வையாவூரானது என்று கூறப்படுகிறது. கிழக்குப் பார்த்த கருவறையில் ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன் வைத்தும், வலது பாதத்தை பின் வைத்தும் காட்சி கொடுக்கிறார். தாமரைத் தண்டு போன்ற தனது இடது கை இடுப்பில் தாங்க, வலது கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அமைந்துள்ளது. தனது காலை சிரசில் வைத்து ஆனந்தமாக நர்த்தனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை சுமந்து சென்று லக்ஷ்மணனை காப்பாற்றியவுடன் ராமர் அனுமனை கட்டித் தழுவுகிறார். அப்போது மலையை தூக்கி வந்ததால் அனுமனின் கைகளில் புண் இருப்பதைக் கண்ட ராமன், அனுமனின் கைகளை தாமரை மலர்கள் கொண்டு வருடுகிறார். தான் வணங்கும் கடவுளே தனக்கு சேவை செய்ததை எண்ணிய அனுமன் ஆனந்தத்தில் துள்ளி குதித்து நடனமாடினார். அதுவே இத்தலத்தில் உள்ள நர்த்தன கோலமாகும். இத்தகைய கோலத்தில் ஆஞ்சநேயரை காண்பதே சிறப்பாகும். இந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு எதிர்புறத்தில் மலைமேல் தென் திருப்பதி என்று மக்களால் போற்றப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயம் அமைந்துள்ளது இவ்வூரின் மேலுமொரு சிறப்பாகும்.
பலன்கள்:
இக்கோயிலின் ஆஞ்சநேயரை வேண்டுபவர் தங்கள் எண்ணங்களை வெள்ளைத் தாளில் எழுதி அதன்மீது மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள் துணியில் முடிந்து அனுமனின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர். பின்னர் அதை கோயிலில் அதற்கென இருக்கும் கொம்பில் கட்டி விட்டுச் சென்றால் நாற்பத்தெட்டு நாட்களுக்குள் அவர்களது எண்ணம் கை கூடுகிறது என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோடிலிருந்து வலது புறமாக வேடந்தாங்கல் சாலையில் 8KM தொலைவில் இக்கோயில் உள்ளது. ன்னையிலிருந்தும், செங்கல்பட்டிலிருந்தும், தாம்பரத்திலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
செங்கல்பட்டில் தங்கி அங்கிருந்து செல்லலாம். செங்கல்பட்டில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மலைவையாவூர், காஞ்சிபுரம் மாவட்டம்.