கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தீர்த்தகிரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு வீற்றிருக்கிறார். இராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த இந்த தீர்த்தமலையாகும். ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி செல்லும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனை அனுப்பினார். ஆனால் அனுமன் வர தாமதம் ஆனதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது.அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு ராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது. மேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணையாற்றங் கரையில் விழுந்து அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். தீர்த்தமலை என்ற பெயருக்கேற்ப இந்த மலையில் ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீராடினால் அணைத்து விதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்டு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.
பலன்கள்:
இது ஒரு மூலிகை மலை என்பதால் இத்தலத்து இறைவனை வழிபட்டால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் பக்தர்களின் அணைத்து விதமான குறைகளும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
தர்மபுரியிலிருந்து அரூர் வழியாக திருவண்ணாமலை சாலை மார்கத்தில் அரூரிலிருந்து 17 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. தர்மபுரியிலிருந்து 52 KM தொலைவு. அரூரிலிருந்து
நகரப் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
அரூரில் தங்கும் விடுதிகள் உள்ளன. எனினும் தர்மபுரியில் தங்கி அங்கிருந்து செல்வதே சிறந்தது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை, தர்மபுரி மாவட்டம் – 636906
தொலைபேசி:
04346 – 253599