கோயிலின் சிறப்புகள்:
இக்கோயில் ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தந்தை தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலைப்போலவே தோற்றமளித்தாலும், மகன் கட்டிய கோயில் தனிச்சிறப்பை கொண்டுள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கத்தையும், மிகப்பெரிய நந்தியையும் உடைய கோயில் இதுவாகும். இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்டது. இந்த நந்தியின் மேல் சூரிய ஒளி பட்டு மூலவரான சிவலிங்கத்தின் மேல் பிரதிபலிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. லிங்கத்துக்கு அடியில் சந்திரகாந்தக் கல் உள்ளது. இக்கல் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் இதமான வெப்பத்தையும் தரக் கூடியதாகும். இங்குள்ள அம்மன் பெரியநாயகி அம்மன் என்ற பெயருக்கேற்ப 9.5 அடி உயரத்தில் பிரம்மாண்டமாய் காட்சி தருகிறாள். இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் லக்ஷ்மி, சரஸ்வதி இருவரும் ஞான லக்ஷ்மி, ஞான சரஸ்வதி என்ற பெயரில் தவக்கோலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோயில் கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாதென்பது இக்கோயிலின் மேலும் ஒரு சிறப்பாகும்.
பலன்கள்:
இந்த கோயிலில் உள்ள துர்கையை வழிபட்டால், பதவி உயர்வு மற்றும் பணியிடை மாற்றம் போன்றவை கிட்டும் என்பது ஐதீகம்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
கும்பகோணம் ஜெயம்கொண்டம் சாலை மார்கத்தில் கும்பகோணத்திலிருந்து 35 KM தொலைவில் உள்ளது. கும்பகோணம் சென்னை சாலையில் உள்ள ஜெயம்கொண்டம் குறுக்கு சாலை என்னும் இடத்திலிருந்து 2 KM தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து ஜெயம்கொண்டம் செல்லும் பேருந்தில் செல்லலாம். சென்னையிலிருந்து செல்வோர் ஜெயம்கொண்டம் குறுக்குச் சாலையில் இறங்கி, அங்கிருந்து செல்லலாம்.
தங்கும் வசதி:
கங்கைகொண்ட சோழபுரத்தில் தங்கும் விடுதிகள் இல்லை. அருகிலுள்ள ஜெயம்கொண்டத்திலோ அல்லது கும்பகோணத்திலோ தங்கி அங்கிருந்து செல்லலாம். இவ்விரண்டு ஊர்களிலும் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கைகொண்ட சோழபுரம், பின் – 621901
தொலைபேசி:
9751341108