கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் முருகப் பெருமான் கந்தசுவாமி என்ற பெயருடன் சுயம்பு மூர்த்தியாய் வீற்றிருந்து அருள்புரிகிறார். முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. சுயம்புமூர்த்தியாக இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில் முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின் இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் இக்கோயிலில் விளங்குகிறார். பொதுவாக அம்மன் கோயில்களில்தான் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் அம்மனின் மருமகள்கலான வள்ளி, தெய்வானைக்கு நவராத்திரி விழா எடுத்து கொண்டாடப்படுவது சிறப்பாகும். கொடிமரம் கோபுரத்திற்கு வெளியே இருப்பதும் சிறப்பாகும்.
பலன்கள்:
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த யந்திர முருகனை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெறலாம் அன்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பழைய சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. தாம்பரத்திலிருந்து கேளம்பாக்கம் வழியாக 30 KM தொலைவில் உள்ளது. சென்னையின் அநேக இடங்களிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 110.
தொலைபேசி:
044–2744 6226, 90031 27288