இறைவன்: |
பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர் |
இறைவி: |
பெரியநாயகியம்மை |
தீர்த்தம்: |
மணிமுத்தாறு |
பாடியோர்: |
சம்பந்தர், அப்பர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 9 வது ஆலயம். விருத்தகிரி, பழமலை என்ற பெயர்களும் உண்டு. சிவபெருமான் முதன்முதலில் இங்குதான் மலைவடிவாக தோன்றினார். இந்தமலை தோன்றிய பிறகுதான் உலகில் மற்ற மலைகள் தோன்றின . இந்த தலம் ஒரு காலத்தில் குன்றாக இருந்தது. பின்பு விபசித்து முனிவர் இந்த கோயிலை திருப்பணி செய்யும் போது வேலை செய்பவர்களுக்கு இந்த ஆலயத்தின் ஸ்தல விருக்ஷமான வன்னி மரத்தின் இலைகளை ஊதியமாக கொடுப்பாராம். அந்த இலைகள் அவர்களுடைய உழைப்புக்கு தகுந்தவாறு பொற் காசுகளாக மாறியதாகவும், மரபு வழியாக பேசப்பட்டு வருகிறது. இறைவன் தன்னை பாடமறுத்த சுந்தரரை தடுத்தாட்கொண்டு அன்னதானம் செய்ய பன்னீராயிரம் பொன் கொடுத்தார், தம்பிரான் தோழர் ஆகிய சுந்தரர் கள்வருக்கு பயந்து பொற்காசுகளை மணிமுத்தாறு நதியில் போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்து கொண்டதாக வரலாறு இந்த நிகழ்ச்சியால்தான் ஆற்றில் போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி வந்தது போலும்.
காசியை போன்று இதுவும் முக்தி ஸ்தலமாகும். இங்கு உள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி பழமலைநாதரை தரிசித்தால் காசியில் கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்த புண்ணியம் கிடைக்குமாம். இங்கு வழிபட்டால் காசியை விட புண்ணியம் வீசம் அதிகம் என்பதை காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி (விருத்தாசலம்) என்று கூறுவார்கள். இங்கு உயிர் விடுவோருக்கு உமை அம்மை தம் ஆடையால் விசிறி அவர்களின் பாவங்களை போக்குவர் என்றும் சிவன் ஐந்து எழுத்தை ஓதி மோட்சம் அளிப்பார் என்றும் புராணம் கூறுகிறது. இத்தல தீர்த்தமான மணிமுத்தாறில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கி விடுவதாக ஐதிகம் .சைவசமயத்தில் உள்ள 28 ஆகமவிதிப்படி 28 லிங்கங்களை முருகபெருமான் ஸ்தாபித்து உள்ளார். இந்த லிங்கங்களின் வரிசைகளின் நடுவே பிள்ளையாறும் வள்ளி மற்றும் தெய்வயானையுடன் முருக பெருபெருமானும் அருள் புரிகிறார்கள்.
இந்த கோயிலில் அனைத்தும் ஐந்து, ஐந்து மூர்த்தங்கள் இறைவனுக்கு ஐந்து திருநாமம், ஐந்து விநாயாகர், ஐந்து கோபுரம், ஐந்து பிரகாரம், ஐந்து உள் மற்றும் வெளி மண்டபங்கள் ஐந்து தேர் மற்றும் தலத்துக்கு ஐந்து பெயர். இங்கு உள்ள அருகில் உள்ள ஆழத்து பிள்ளையார், பிள்ளையாரின் இரண்டாவது படைவீடாகும்
தேவாரம்:
தக்கனது பெருவேள்வி தகர்த்தானாகித்
தாமரையான் நான்முகனுந்தானே யாகி
மிக்கதொரு தீவளி நீராகாசமாய்
மேலுலகுக் கப்பாலாயிப்பாலானை
அக்கினொடு முத்தினையுமணிந்து தொண்டர்க்
கங்கங்கே அறு சமயமாகி நின்ற
திக்கினையென் திருமுதுகுன்றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைதவாறே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
விருத்தாச்சலம் சென்னை – திருச்சி ரயில் பாதையில் உள்ள முக்கியமான ரயில் நிலையம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 3.30 – 9.00
கோயில் முகவரி:
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம் 606 001.
தொலைபேசி:
யூ.பாலசுந்தரமூர்த்தி குருக்கள்: 04143 – 230203,
செயல் அலுவலர்: 98650 21498