கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் திருக்காமீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தியாய் அருள்புரிகிறார். ஒரு சமயம் பெருமாளுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவனும் அவர்கள் இருவரில் யார் தன் அடியையும் முடியையும் முதலில் காண்கிறார்களோ அவரே பெரியவர் எனக் கூறினார். இருவரும் அடி முடி
தேடிச் சென்றனர். அப்போது பிரம்மா தான் போட்டியில் வெல்லும் நோக்கில் சிவனின் முடியைக் கண்டதாக பொய் கூறிவிடுகிறார். பொய் கூறியதால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தை போக்க அருளுமாறு சிவனிடம் வேண்டினார். சிவனும் தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் படைத்து அதில் சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும் என கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்திலிருந்து விடுபட்டார். வில்வ காடாய் இருந்ததால் வில்வநல்லூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி வில்லியனூர் என்றாகியது. இத்தலத்து இறைவன் மீது பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய ஒளி படுகின்றது. இத்தலத்து அம்மன் முன் இரண்டு நந்திகள் இருப்பது சிறப்பாகும். இங்கு பைரவர் தனது நாய் வாகனம் இல்லாதிருப்பதால் இத்தலம் முக்தி தளமாக விளங்குகிறது.
பலன்கள்:
குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
புதுச்சேரி விழுப்புரம் சாலையில் 8 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.
தங்கும் வசதி:
புதுச்சேரியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர், புதுச்சேரி – 605 110
தொலைபேசி:
0413-266 6396