இறைவன்: | உத்தவேதீஸ்வரர், வீங்குநீர் துருத்தி உடையார் |
இறைவி: | அரும்பன்னவளைமுலை அம்மன் |
தீர்த்தம்: | வடக்குளம், காவிரி |
பாடியோர்: | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 37 வது ஆலயம். துருத்தி என்பதற்கு ஆற்றிடைக்குறை என்பது பொருள். இவ்வூர், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காவிரியின் நடுவுள் இருந்தது. “பொன்னியின் நடுவுதன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தியானை” என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியால் இச்செய்தியை அறியமுடிகிறது. குத்தாலம் என்னும் ஒருவகை உத்தால மரத்தைத் தல விருட்ச மாகக் கொண்டுள்ளமையால் இது மரத்தின் பெயரால் குத்தாலம் என்று வழங்கப்பெறுகின்றது. இதைக் குற்றாலம் என்றும் வழங்குவர். குத்தாலம் என்பதே மருவிக் குற்றாலம் என்று வழங்குகின்றது. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம்வேறு, இது வேறு. இறைவரின் திருப்பெயர்,’சொன்னவாறு அறிவார்’, வீங்கு நீர் துருத்தி உடையார், கற்றளிமகாதேவர் என்பன. வடமொழியில் உத்தவேதீசுவரர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் அரும்பன்ன வனமுலை அம்மை. வடமொழியாளர் மிருது முகிழாம்பிகை என்பர். திருவேள்விக்குடிப் பதிகத்தில், சம்பந்தர் இவ்வூர் அம்பாள் பெயரை “அரும்பன வனமுலை யரிவையோடொருபக லமர்ந்தபிரான்” என்று அருளியிருக்கின்றார்.
தீர்த்தம் காவிரி, வடகுளம் என்பன. இவற்றுள் வடகுளம் என்பது. கோயிலினுள் வடபாலில் இருக்கின்றது, சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்திற்கு எழுந்தருளி, தம் மேல் உற்ற பிணி வருத்தத்தைத் தீர்த்தருளுமாறு சிவபெருமானை வேண்டினார். “வடகுளத்துக்குளி” என்று சிவபெருமான் மொழிந் தருள, சுவாமிகளும் வேதமெல்லாம் தொக்க வடிவாய் இருந்த துருத்தி யாரைத் தொழுது, அக்குளத்தில் மூழ்கினார். அக்கணமே பிணி நீங்கி, மணியொளிசேர் திருமேனி ஆயினார். இச்செய்தியைச் சேக் கிழார் குறிப்பிட்டுள்ளார். சுவாமிகளும் இவ்வூர்ப்பதிகத்தில் “என் உடம் படும் பிணியிடர் கெடுத்தானை“ எனக் குறிப் பிட்டுள்ளார்கள். இன்றும் கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில் இக்குளத்தில் நீராடுகிறார்கள் . குளக்கரையில் சுந்தரருக்கு கோயில் உள்ளது.
அக்கினி வருணன்,காசிபர் முதலானோர் பூசித்துப் பேறு பெற்றனர். இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்கு குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி. இறைவனை தவம்செய்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார்
இறைவனின் பாதுகையை இன்றும் தலவிருஷத்தின் அடியில் தரிசிக்கலாம். இத்தலம் தருமை ஆதின திருக்கோயிலாகும்.
தேவாரம்:
வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்தும் கும்பகோணத்திலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம் 609301.
தொலைபேசி:
கே. ராஜசேகரகுருக்கள்: 04364 – 235225, 9487883800