கோயிலின் சிறப்புகள்:
இத்திருக்கோயிலில் இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் காஞ்சி மகா பெரியவர் இந்த தலத்தில் சிலைகள் புதைந்து கிடக்கின்றன. அதை எடுத்து பிரதிஷ்டை செய்யுங்கள் அன்று அருளாசி வழங்கினார். இக்கோயில் இருந்த இடம் முன்னர் மண்மேடாக இருந்தது. அதை அகற்றும்போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் சிலையூர் என அழைக்கப்பட்ட இவ்வூர் பின்னர் மருவி சேலையூர் என்றானது. இக்கோயிலுக்கு உள்ளேயே திருக்குளம் அமைந்துள்ளது. சுற்றுச்சுவர்களில் கங்கை முதல் காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகளை அமைத்து, அந்த நதிச் சிலைகளிலிருந்து நீர் கொட்டுவதுபோல அமைத்துள்ளார்கள். வருடந்தோறும் மாசி மகத்தன்று இந்த நதிகளுக்கு சிறப்பாக விழாவும் கொண்டாடுகிறார்கள். திருக்கடையூர் சென்று சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ள இயலாதவர்கள் இத்தலத்திற்கு வந்து செய்து கொண்டு பலனடையலாம் என்பது சிறப்பாகும்.
பலன்கள்:
இந்த கோயிலில் பிரார்த்தனை செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சென்னை தாம்பரம் வேளச்சேரி சாலையில் சேலையூரில் இக்கோயில் அமைந்துள்ளது. ஏராளமான மாநகரப் பேருந்துகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சேலையூர், சென்னை.