கோயிலின் சிறப்புகள்:
கேரளாவில் அமைந்துள்ள கோயில்களில் இது ஒரு முக்கியமான கோயிலாகும். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான் செய்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். அப்போதெல்லாம் இவளுக்கு உயிர்ப்பலியிட்டும், கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள். அதன் பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார். ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும். உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது. அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது. இதையும் மூலஸ்தானமாக கருதி இதற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது சிறப்பாகும். அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. சாந்தாட்டம் என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது.
பலன்கள்:
அம்மை நோய் கண்டவர்கள், கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், மன அமைதி இல்லாதவர்கள், எதிரி தொந்தரவு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து குருவாயூர் செல்லும் சாலையில் கொச்சியிலிருந்து 35 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. கொச்சி, குருவாயூர், திருச்சூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள கொச்சியில் தங்கி அங்கிருந்து செல்லலாம். கொச்சியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 4.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோயில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம்.
தொலைபேசி:
0480-280 3061