இறைவன்: | பிரம்மபுரீஸ்வரர் |
இறைவி: | மலர்குழல்மின்னம்மை |
தீர்த்தம்: | காசி தீர்த்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 48 வது ஆலயம். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத் தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமேயாகும். பிரம்மபுரி, வில்வராண்யம், கடவூர் மயானம், பிரம்மபுரம், சிவவேதபுரி, திருமெய்ஞானம் என்ற பெயர்களில் இத்தலம் அழைக்கப்படுகிறது. மூலவர் சன்னதியின் வட புறத்தில் தென் முகமாக சிங்காரவேலர் சன்னதி உள்ளது. அச்சன்னதியில் சிங்காரவேலர் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். போருக்கு செல்லும் கோலத்தில் அவருடைய கையில் வில்லும், வேலும் உள்ளது. இம்மண்டபத்தினை அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. அந்த சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை, பைரவர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் பைரவர், காசி விசுவநாதர், நால்வர் ஆகியோர் உள்ளனர். சூரியன் உள் திருச்சுற்றின் கீழ் புறத்தில் மேற்கு முகமாக உள்ளார். சண்டிகேஸ்வரர் உள் திருச்சுற்றில் தனிச் சன்னதியில் உள்ளார். விநாயகர் சன்னதி திருச்சுற்றில் உள்ளது. அம்பாள், சுவாமி சன்னதிக்கு எதிர்ப் புறமாக கிழக்கு நோக்கி தனிச் சன்னதியில் கொண்டுள்ளார்.
மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 107 வது தலம். இத்தலத்திலிருந்து திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் கோயில் இறைவனாரின் திருமஞ்சனத்திற்குரிய அபிஷேக தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது. சிவபெருமான் ஒரு கல்பத்தில் பிரமதேவரை எரித்து, நீறாக்கி அவரை மீளவும் உயிர்ப்பித்துப் படைப்புத்தொழிலை அருளிய தலமாதலின் மயானம் என்னும் பெயர் எய்திற்று என்பர்.இத்தலத்தில் சிவன் பிரம்மனை நீறாக்கி மீண்டும் உயிர்ப்பித்து அவருக்குப் படைப்புத் தொழிலை அருளினார் என்பது தொன்நம்பிக்கை.
தேவாரம்:
பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 26 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இருந்து 2.கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், சீர்காழியிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
திருக்கடையூரில் ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன. மயிலாடுதுறை, சீர்காழியில் தங்கி அங்கிருந்தும் செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 4.00 – 8.30
கோயிலின் முகவரி:
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் மயானம், மயிலாடுதுறை மாவட்டம் 609311.
தொலைபேசி:
04364-287 222