இறைவன்: | சந்திரமௌலீஸ்வரர், சந்திரசேகரர் |
இறைவி: | வக்ரகாளியம்மன், வடிவாம்பிகை, அமிர்தாம்பிகை |
தீர்த்தம்: | சந்திர, சூரிய தீர்த்தம் |
பாடியோர்: | சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 30 வது ஆலயம். மகாவிஷ்ணு வக்கிராசூரனை இத்தலத்தில் போரிட்டு அழித்தார். அப்போது வக்கிராசூரனின் இரத்தம் பூமியில் சிந்தியது. சிந்திய குருதியிலிருந்து அசூரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு தோன்றுவதை தடுக்க காளி அந்த குருதியை உறுஞ்சி குடித்துவிட்டதால் அசுரர்கள் தோன்றுவது தடுக்கப்பட்டது. வக்கிராசூரனின் தங்கை துன்முகி கர்ப்பத்துடனேயே போரிட வந்தபோது, கர்ப்பவதியை கொல்லுவது பாவம் என்பதால், அவள் வயிற்றில் உள்ள குழந்தையை காதில் குண்டலமாக அணிந்து காளி துன்முகியை அழித்தார். இதனால் வக்கிர காளி என அழைக்கபடுகிறார்.
எந்த தலத்திலும் காணமுடியாத வகையில் மூலவர் சிவலிங்கம் மூன்று முகமாக காட்சி தருகிறார். இவை தத் புருஷ முகம், அகோர முகம், வாமதேவ முகம் என சொல்லபடுகிறது. இவை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோரின் முகம் என்றும் கூறப்படுகிறது. இந்த கோயிலில் எல்லாமே வக்ரமாக உள்ளது. இந்த கோயிலில் இராஜகோபுரம், நந்தி, கொடிகம்பம், சுவாமி முதலியன மற்ற கோயில்களை போல் நேர் கோட்டில் அமையாமல் விலகி வக்கிரமான நிலையில் உள்ளது. நடராஜர் கால் மாறி ஆடுகிறார். வரதராஜபெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இல்லாமல் மாறி இருக்கும். இங்கு உள்ள வக்கிர சனிபகவானின் வாகனமான காக்கை வலது புறத்தில் இல்லாமல் இடது புறத்தில் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு எதிராக மயான பூமி உள்ளது. இங்கு குண்டலினி சித்தர் ஜீவ சமாதியாக உள்ளார்.
வக்கிரகாளியம்மன்தான் இப்போது இந்த கோயிலில் மிகவும் பிரசித்தம். பௌர்ணமி இரவு 12 மணிக்கு வக்கிரகாளியம்மன்னுக்கு ஜோதி தரிசனம் காட்டும்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கிறார்கள். வக்கிரதோஷம், புத்திரதோஷம், ஜாதகதோஷம், வியாபாரத்தடை, திருமணம் ஆகாதவர்கள் மற்றும் பிள்ளைபேறு இல்லாதவர்கள் வக்கிரகாளியை வேண்டி அருள் பெறுகிறார்கள்.
தேவாரம்:
ஏனவெண் கொம்பிநோடும் இளவாமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையும் குளிர்மத்தமும் சூடி நல்ல
மானன மென் விழியளோடும் வக்கரை மேவியவன்
தானவர் மூப்புரங்கள் எரி செய்த தலை மகனே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் சாலையில் திண்டிவனத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
திண்டிவனம் அல்லது புதுச்சேரியில் தங்கி அங்கிருந்து செல்லலாம். இவ்விரு ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 9.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு வக்ரகாளியம்மன் சமேத சந்திரமௌலீஸ்வரர் திருகோயில், திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம் 604304.
தொலைபேசி:
செயல் அலுவலர் – 0413-2688949, 0413-2680870