கோயிலின் சிறப்புகள்:
இத்தலம் சற்று மேடானப் பகுதியில் அமைந்துள்ளதால் இத்தலத்து பெருமாள் மலைமண்டலப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள கருட பகவான் மிகவும் விசேஷமானவர். இந்த கருடன் தலையில் ஒன்று, இரு காதுகளில் ஒவ்வொன்று, மார்பினில் மாலையாக இரண்டு, இரு தோள்களிலும் ஒவ்வொன்று, இடுப்பில் அரைஞாண் கயிறாக ஒன்று என எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சி தருவதால் இவர் அஷ்டநாக கருடன் என்றழைக்கப்படுகிறார். இவரைத் தரிசிப்பவர்களுக்கு சகலவித சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த கோயிலில் அமைந்துள்ள ஒரு விளக்கு மிகவும் மகிமை வாய்ந்ததாகவும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. விளக்கின் மேற்பாகத்தில் கருடன்களும் நாகங்களும் தாங்குமாறு ஓர் அமைப்பு உள்ளது. கீழ் பாகத்திலோ கிளிகள் தாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. இவ்விளக்கில் நெய் ஊற்றிப் பிரார்த்தனை செய்து கொண்டால் நம் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது ஐதீகம். மகான் ராகவேந்திரர் வழிபட்ட கோயில் இது என்பது இக்கோயிலின் மேலுமொரு சிறப்பாகும்.
பலன்கள்:
திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், பல காரணங்களால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் இங்குள்ள கருடனை வழிபட்டு பலனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் உள்ளது. சென்னையிலிருந்து பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள கல்பாக்கத்திலோ அல்லது மாமல்லபுரத்திலோ தங்கி அங்கிருந்து செல்லலாம். மாமல்லபுரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு மலைமண்டலப் பெருமாள் கோயில், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம்.