இறைவன்: |
மங்களபுரீஸ்வரர் |
இறைவி: |
தியாகவள்ளி |
தீர்த்தம்: |
கோயில் கிணறு, குளம் |
பாடியோர்: |
சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார். அப்போது பல இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழி பட்டார். இந்த இடத்தை கடக்கும் பொழுது அகத்தியர்க்கு வயிற்று வலி வந்தது. இறைவனை வேண்டி மணலால் லிங்கம் செய்ய முற்பட்டார். ஆனால் அவரால் முடியவில்லை. சிவனை வேண்டி அங்கே உள்ள முலிகைகளை சேர்த்து சிவலிங்கம் செய்து முடித்தார். வயிற்று வலி நீங்கியது. பின்பு அந்த சிவலிங்கம் இருந்த இடத்தில கோயில் கட்டப்பட்டது.
இந்த ஆலயம் கடல் சீற்றத்தால் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. இங்கு வந்த மதுரை இராமலிங்க சிவ யோகி என்ற தம்பிரான் இந்த மணல் மேட்டின் மேல் தெரிந்த கோபுர கலசத்தை கண்டு, கடலூரில் உள்ள சில சிவ அன்பர்களின் உதவியுடன் கோயிலை கண்டுபிடித்து கட்டுவித்தார். இதனால் இந்த கோயில் தம்பிரான் கண்ட கோயில் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். கோஷ்டத்தில் இறைவனுக்கு இருபுறமும் திருமாலும் பிரம்மாவும் நின்ற கோலத்தில் வழிபடுகிறார்கள். பிரகாரத்தில் கண்ணப்ப நாயனார் சிலை உள்ளது.
இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் உள்ளது . மஞ்சளும், குங்குமமும் அம்பாள் வழிபாட்டிற்கு உரியது. ஆனால், திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர். அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதாகவும், அதன் காரணமாக சிவலிங்கத்துக்கு மஞ்சள், குங்கும வழிபாடு நடப்பதாகவும் ஐதீகம். இதனால், சுவாமிக்கு “மங்களபுரீஸ்வரர்’ என்று பெயர்.
தக்ஷிணமூர்த்தி பெருமானின் சிலையை தட்டி பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. இசை பயிற்சி மாணவர்கள் இங்கு வந்து பாடி, இசைத்து வேண்டி கொள்கிறார்கள். திருபுவனச் சக்ரவர்த்தியின் மனைவி தியாகவல்லி வழிபட்டதால் இறைவிக்கு இந்த பெயர் வந்திருக்கலாம். இருவரின் சிலையும் பிரகாரத்தில் உள்ளது.
தேவாரம்:
விடை அமர்ந்து வெண்மழு ஒன்று
ஏந்தி விரிந்து இலங்கு
சடை ஒடுங்கத் தண்புனலைத்
தாங்கியது என்னை கொலம்
கடை உயர்ந்த மும்மதிலும்
காய்ந்து அனலுள்ளழுந்தத்
தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்
சோபுர மேயவனே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
கடலூர் – சிதம்பரம் சாலையில் 13 வது கீ.மீ.ல் ஆலப்பாக்கம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில் இரண்டு கீ.மீ.சென்றால் திருச்சோபுரம் அடையலாம். கடலுக்கு அருகில் உள்ள கோயில் காலை அல்லது மாலையில் செல்வது நல்லது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8.30 – 11.00 மற்றும் மாலை 5.30 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம் தியாகவல்லி, கடலூர் மாவட்டம். – 608 801
தொலைபேசி:
ஆர். விஜயகுமார் குருக்கள் 98436 70518, 94425 85845