இறைவன்: | நற்றுணையப்பர் |
இறைவி: | பர்வதபுத்திரி, மலையான்மடந்தை |
தீர்த்தம்: | சொர்ண தீர்த்தம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 43 வது ஆலயம். சோழப் பேரரசனான ராஜேந்திர சோழன், தந்தை ராஜராஜனின் ராஜராஜேச்சுரம் என்னும் தஞ்சை பிரகதீஸ்வரம் போன்ற கங்கை கொண்ட சோழீச்சுரத்தை, அரிய சிற்ப நுணுக்கங்களோடு படைத்தான். அதோடு இன்றைய மலேசிய நாட்டிலுள்ள பண்டைய ‘கெடா’ என்ற நகரத்தை வென்றதன் நினைவாக ‘கடாரங்கொண்ட சோழீச்சுரம்’ என்ற ஊரையும் சோழ நாட்டினில் உருவாக்கினான். இதனால் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு ‘பூர்வதேசமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப் பெற்றது. கடாரங்கொண்டான் என்பதே மருவி கிடாரங் கொண்டான் ஆகிவிட்டது. இந்த திருத்தலம் இந்த ஊரில் அமைந்துள்ளது.
நனிபள்ளிக்கும் திருஞானசம்பந்தருக்கும் ஒரு முக்கியமான தொடர்பு உள்ளது. திருஞானசம்பந்தரின் தாயாரான பகவதி அம்மையார் பிறந்த தலமாகும் இது. திருஞானசம்பந்தர் மூன்று வயதாக இருக்கும் பொழுது ஒரு நாள் தன் தந்தையுடன் திருக்குளத்தில் நீராட சென்றார். தந்தை குளத்தில் நீராட குழந்தை பசியால் வாடி அழத்துவங்கியது, குழந்தையின் அழுகுரல் கேட்டு ஈஸ்வரனும் உமையாளும் தோன்றினர். உமையாள் குழந்தையின் பசி போக்கி ஆசி வழங்கி மறைந்தனர். நீராடி முடித்து வந்த தந்தை குழந்தையின் வாயில் பால் இருப்பதை கண்டு குழந்தையை கடிந்து கொள்ள மழலை மொழியில் ஞானசம்பந்தர் பாடல் பாடினார்.பின்னாளில் ஞானசம்பந்தர் இறைவனை வேண்டி திருப்பதிகங்களை பாடினார். அன்று முதல் திருஞானசம்பந்தர் என்று அழைக்கப்பட்டார்.அதுவரை பாலையாகி காட்சியளித்த நனிப்பள்ளியை பாடல் பாடி நெய்தல் நிலமாக மாற்றி பின்னர் மருத நிலமாக மாற்றி அருளினார்.பொன் விளையும் பூமியாகி போன நனிபள்ளி .பாலை சோலையாகி பொன் விளையும் பொன்செய் நிலங்கள் செழித்தோங்கியதால் இப்பகுதி பொன்செய் என்றும் பின்னர் புஞ்சை என்று மருவி அழைக்கப்பட்டது.
அகத்தியரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க விநாயகர் இங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்துள்ளார். இதனால் இத்தலம் “பொன்செய்’ ஆனது. இதுவே காலப்போக்கில் மருவி “புஞ்சை’ ஆனது என்றும் கூறுவர். காவிரி நதி இங்கு வந்து கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர். மூலவர் நற்றுணையப்பர் என்று அழைக்கப்படுகிறார். மனதில் உள்ள பயம் நீக்கி நல்வழிக்கு துணையாய் நிற்பவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இறைவியர்களாக மலையமான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
சோழர் காலக்கல்வெட்டில் இத்தலம் “ஜயங் கொண்ட வளநாட்டு ஆக்கூர் நாட்டுப்பிரமதேயமாகிய நனிபள்ளி” என்று குறிக்கப்படுகிறது. கோயிலின் சுற்றுபுற சுவற்றில் அகத்தியர், பிரம்மா, சிவன் உள்ளிட்ட சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அழகிய வேலைபாடுகளுன் கூடிய சிலைகளை நாம் எங்கும் காண இயலாது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. கருவறை கோபுரம் மட்டுமே உள்ளது. இவ்வளவு பெரிய கருவறை இந்தியாவில் உள்ள எந்த சிவத் திருதலங்களிலும் காண முடியாது. யானை வழிபட்ட தலம். திருமண தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாண சுந்தரேசரை வணங்கினால் தோஷம் விலகும். துர்க்கை அம்மன் பெரும்பாலும் கோயில்களில் எருமை தலை மேல் நின்று அருள்புரிவார். அனால் இங்கு மான் மற்றும் சிங்கத்துடன் சும்பன், நிசும்பனை சம்ஹாரம் செய்த கோலத்தில் அருள் புரிகிறார்.
திருச்சுற்றில் கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதி, விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலம் காட்டிய தலம். புள்ளமங்கை கோயிலில் உள்ளது போல கருவறையைச் சுற்றி மிகச்சிறிய சிற்பங்களைக் கொண்ட பெருமையுடையது இக்கோயிலாகும். காலத்தை வென்று நிற்கும் இந்த கோயில் சோழனின் கட்டிடக்கலை தமிழனின் பெருமைக்கு என்றும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தேவாரம்:
ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய
சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், சீர்காழியிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறை, சீர்காழியில் தங்கி அங்கிருந்தும் செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 9.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 7.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில், திருநனிப்பள்ளி (புஞ்சை), கிடாரம்கொண்டான் அஞ்சல், மயிலாடுதுறை மாவட்டம் 609304.
தொலைபேசி:
எஸ். முத்தையா குருக்கள் – 04364 – 283188