கோயிலின் சிறப்புகள்:
இந்த கோயிலில் ஆஞ்சநேயர் ஐந்து தலைகளுடன் 36 அடி உயர சிலையாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். ஒரு முறை ராமாயணத்தில் இராவணன், மயில்ராவணன் என்ற அசுரனின் துணையுடன் ராமனோடு போர் புரிய வந்தான். ராமரை அழிப்பதற்காக மயில்ராவணன் கொடிய ஒரு யாகத்தை நடத்த எண்ணினான். அந்த யாகம் நடந்தால் ராம, லக்ஷ்மணர்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார். இந்த விஸ்வரூப ஆஞ்சநேயரையே பஞ்ச முகத்துடன் 36 அடி கொண்ட சிலையாக வடித்துள்ளனர். மேலும் இக்கோயிலில் ராமர் பாலம் கட்ட பயன்பட்ட 8 கிலோ எடையுள்ள மிதக்கும் கல்லையும் நம் காணலாம்.
பலன்கள்:
இந்த தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர், வராஹர் மற்றும் கருடனை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் 10 KM தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.
தங்கும் வசதி:
புதுச்சேரியில் தங்கி அங்கிருந்து செல்லலாம். புதுச்சேரியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்,
பஞ்சவடி , விழுப்புரம் மாவட்டம், பின் – 605111
தொலைபேசி:
0413 – 2671232, 2671262, 2678823