இறைவன்: |
சிஷ்ட குருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர் |
இறைவி: |
சிவலோக நாயகி, பூங்கோதை நாயகி |
தீர்த்தம்: |
சூரிய தீர்த்தம் |
பாடியோர்: |
சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 15வது ஆலயம். அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார். அப்போது பல இடங்களில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வழி பட்டார். இந்த இடத்திலும் இறைவன்-இறைவி திருமணகோலம் காண அகத்தியர் விரும்பினார். அவருக்கு திருமண கோலத்தில் இறைவன் காட்சி அருளினார். கைலாயத்தில் திருமணம் நடந்ததால் சிவனை மேற்கு நோக்கியும் அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டார். வடக்கு நோக்கி உறையும் அம்மன் காண்பது அபூர்வம்.
சுந்தரர் இந்த தலத்தை தென்பெண்ணையாறு குறுக்கிடவே கரையில் இருந்தே சிவனை நினைத்து பாடினார். அப்போது அங்கு வந்த வயோதிக தம்பதியர் அவரை படகில் அக்கரையில் விட்டனர். இறைவன் சுந்தரருக்கு தெரியாமல் மறைந்து கொள்ள சுந்தரர் தேடிபார்த்தும் வயோதிக தம்பதியரை காணவில்லை. அப்போது முதியவர் நீங்கள் தேடுபவரை மேலே பாருங்கள் என்று கூறி மறைந்துவிட்டார். மேலே பார்த்தபொழுது சிவன் பார்வதியுடன் ரிஷபத்தில் காட்சி தந்தார். இறைவன் சுந்தரரின் வேண்டுகோளுக்கு இணங்கி குருவாக இருந்து தவநெறி உபதேசம் செய்தார். இதனால் இறைவனுக்கு சிஷ்டகுருநாதேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
கோயிலுக்கு எதிரே சுந்தரரை முதியவர் வடிவில் வந்து சிவன் தடுத்த இடத்தில் “தடுத்தாட்கொண்டீஸ்வரர்’ மற்றும் “அஷ்டபுஜ காளி’க்கு சன்னதிகள் உள்ளன. இச்சன்னதிக்கு அருகில் மெய்க்கண்ட நாயனாரின் சீடரான அருள்நந்தி சிவாச்சாரியார் முக்தியடைந்த இடம் இருக்கிறது.
தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது கோவிலுக்கு வெளியில் உள்ள அஷ்டபுஜ பத்திரகாளி சந்நிதி மிகவும் விசேஷமான பிரார்த்தனை சந்நிதி. பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறுகிறது. தேரடியிலுள்ள விநாயகர் மூன்றடி உயரமான மூர்த்தியாவார். கோயிலுக்கு நேர் எதிரில் அருள் நந்தி சிவாசாரியாரின் சமாதிக்கோயில் உள்ளது. இது திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது. ஆண்டுதோறும் புரட்டாசி பூரத்தில் குருபூஜை நடத்தப் பெறுகிறது. அருள் நந்தி சிவாசாரியாரின் மரபினரே இக்கோயிலில் பூசை செய்யும் குருக்கள் ஆவார்.
தேவாரம்:
மாவாய் பிளந்தானும் மலர்மிசையானும்
ஆவா அவர் தேடி திரிந்தல மாந்தர்
பூவார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்
தேவா உனை வேண்டி கொள்வேன் தவநெறியே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
பன்ருட்டியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. பன்ருட்டியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து வசதி உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 10.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில், திருத்துறையூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் – 607205.
தொலைபேசி:
ஏ.முரளிகுருக்கள் 04142 – 248948, 94448 07393