கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் முருகன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் சுமார் 800 படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு மலைக்கோயில் ஆகும். பாம்பாட்டிச் சித்தர் என்னும் சித்தர் இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை பாம்பு வைத்தியர் என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர் நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டை முனிவர் அவருக்கு காட்சி தந்து உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே என்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச் சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்றமுடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். பின்னர் முருகன் இங்கேயே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மலைப் பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தருக்கு தனிச் சன்னதி உள்ளது. பாம்பாட்டிச் சித்தர் இன்றளவும் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். இக்கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற கோயில் என்பது சிறப்பாகும்.
பலன்கள்:
பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் இந்த விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாவதாக நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
கோயம்பத்தூரில் இருந்து 14KM தொலைவில் இக்கோயில் உள்ளது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
கோவையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
மாலை 2.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி, திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம் – 641046.
தொலைபேசி:
0422-2422490