இறைவன்: | சுவர்ணபுரீஸ்வரர் |
இறைவி: | மறுவார்குழலி |
தீர்த்தம்: | சூரிய தீர்த்தம், காவிரி |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 42 வது ஆலயம். கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள மாடக்கோயில் இந்திரன் விருத்திராசுரனைக் கொல்வதன் பொருட்டுப் பூசித்து வழிபட்டான்.இத்தலத்தில் இந்திரன் விருத்திராசுரனைக் கொல்ல வச்சிராயுதம் பெற்றான் என்பதும் தொன்நம்பிக்கை. அதனால் இந்திரபுரி எனவும் வழங்கப்பெறும். முருகப்பெருமான் தாரகாசுரவதத்தின் பொருட்டுப் பூசித்தமையின் ஸ்கந்தபுரி எனவும் வழங்கும். அகஸ்தியர் வழிபட்டுப் புருஷார்த்தங்களைப் பெற்றார். பிரமன் பூசித்துப் படைப்புத்தொழில் கைவரப் பெற்றான். ரதி பூசித்துத் தன் பதியாகிய காமனையடைந்தாள். நாககன்னியர்கள் வழிபட்டு நல்ல கணவரை அடைந்தனர். இந்திரன், தக்ஷன்யாகத்தில் கலந்துகொண்ட குற்றத்திற்குப் பரிகாரந்தந்தருளிய தலமும் இதுவே. வசிட்டர், திக்பாலகர்கள், காவிரி, சமுத்திரம் முதலியவர்களும் பூசித்துப் பேறு பெற்றனர். தாட்சாயணிக்கு அருள் கிடைத்ததும் ,வீரபத்திரர் தக்ஷயாகத்திற்காக அவதரித்த தலமும் இதுதான். இத்தலத்திற்கு அருகாமையில் ஓடும் காவிரியில் இட்ட எலும்புகள் பூமரங்களாய் இறைவனுக்குச் சாத்தப் பயன்பெறும். பிரம்ம தேவர், இந்திரன், குபேரன், வசிட்டர், அகத்தியர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.
தேவாரம்:
மருவார் குழலி மாதோர் பாகமாய்த் திருவார் செம்பொன் பள்ளி மேவிய கருவார் கண்டத் தீசன் கழல்களை மருவா தவர்மேன் மன்னும் பாவமே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து பொறையார் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், சீர்காழியிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறை, சீர்காழியில் தங்கி அங்கிருந்தும் செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருசெம்பொன்பள்ளி, செம்பனார்கோயில். மயிலாடுதுறை மாவட்டம் 609309.
தொலைபேசி:
முத்துகுமார சிவாச்சாரியார் 99437 97974